இஸ்லாம் வளர்த்த இசைத் தமிழ்

sma_kader.jpg 

நண்பன் நாகூர் ரூமியின் ‘அவரோகணம்‘ + என்னுடைய ‘கடை‘யைப் படிக்காமலேயே இந்த ‘நஹரா’வை அடிக்கலாம்! – ஆபிதீன்

***

இசைத் தமிழை இசைத்து வளர்க்கும் இசுலாமியர் 

முனைவர் இரா.திருமுருகன்

சோட்டுமியான் சாகிபு
இவர் புதுக்கோட்டை அரசர் அவைக்களைத்தின் இசைப் புலவராகவும் நாகூர் தர்கா வித்துவானாகவும் விளங்கினார். இந்துத்தானி இசையில் பெரும்புலவர். காசியிலிருந்து தென்னாடு வந்து தமிழிசைக் கற்றவர். இவர் காலத்தில் ஆர்மோனியம் என்ற மேனாட்டு இசைக் கருவியைக் கருநாடக இசையரங்குகளில் பக்கக் கருவியாக வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தர்பார் கானடா என்ற இராகத்தைப் பாடுவதில் இவர் இணையற்ற விளங்கினார். அதனால் ‘தர்பார் கானாடா சோட்டுமியான்’ என்று இவரை அழைப்பார்கள். மிகப் பெரிய இசைவாணர் என்பதால் உஸ்தாத் [Vosthaath] சோட்டுமியான் என்றும் இவரை அழைப்பார்கள்.நன்னுமியான் சாகிபுசோட்டுமியானின் உடன்பிறந்த தம்பி இவர். மாபெரும் டோலக் கலைஞர். அதனால் இவர் ‘டோலக்கு நன்னுமியான்’ என்று அழைக்கப்பட்டார். தாளக் கருவியில் நிகரற்று விளங்கியதால் , மத்தளத்தில் கலைத் தெய்வம் நந்தீசுவரனைப் போன்றவர் என்ற பொருளில் இவரை ‘நந்தீசுவர நன்னுமியான்’ என்று அழைப்பார்கள். இவர்க்கு இசையாசிரியர் தன் அண்ணன் சோட்டுமியானே. உருப்படிகளையே தோல்கருவிகளில் வாசிக்கும் திறன் பெற்றிருந்தார். பன்னிரண்டு சுரத்தானங்களுக்கும் பன்னிரண்டு கற்களை வரிசையாக வைத்து சலதரங்கம்போல் ஒருமுறை இவர் வாசித்தாராம். இது புதுக் கோட்டை அரசரை அப்படியே இருக்கையிலிருந்து தூக்கி எறிந்து விட்டதாம் !கவுசுமியான் சாகிபுஇவர் சோட்டுமியான் சாகிபின் மகன். இவரும் ‘உஸ்தாத் கவுசுமியான்’ என்றழைக்கப்பட்டார். பெரிய இசைவாணராகவும் நாகூர்த் தர்கா வித்துவானாகவும் விளங்கினார். வாய்ப்பாட்டுப்போல் ஆர்மோனியத்திலும் நிகரற்றவர். ஆர்மோனியத்தை கற்றுக்கொண்டு முதன் முதலாக அதைக் கருநாடக இசையரங்கில் அறிமுகப் படுத்தியவர் இவரே. சோட்டுமியான் இசையரங்கில் இவர் ஆர்மோனியத்தைப் பக்கக் கருவியாக வாசித்தார். ‘கமகம் இல்லாத வாத்தியம்; நிறுத்திவிடு’ என்று தன் மைந்தனிடம் சொன்னாராம் சோட்டுமியான். அதன் பிறகு அதைக் கமகத்துடன் வாசிக்கப் பழகிக் கொண்டாரம்.

dawudmiyan.jpg

தாவுதுமியான் சாகிபு

இவர் சோட்டுமியானின் பேரரும் கவுசுமியானின் அண்ணன் மகனுமாவார். இவரும் உஸ்தாத் என்று மதிப்புடன் அழைக்கட்டு நாகூர் தர்கா புலவராக விளங்கிப் புகழ் பெற்றிருந்தார். சிறந்த பாடகர். ஆர்மோனியத்திலும் வல்லவர். இவரும் ஆர்மோனியம் டி.எம்.காதர் பாட்சாவும் ஆர்மோனியப் போட்டிகளில் ஈடுபடுத்தப்பட்டதுண்டு. போட்டி வேண்டாம் என்று இவர்களிருவரும் நட்பு முறையில் தங்கள் முழுத்திறனையும் வெளிப் படுத்துவார்கள். தாவுதுமியான் இசையரங்கு நிகழ்த்தியபோது ஒரு முறை இரவு 9 மணிக்குத் தொடங்கி இரவு 3 மணிக்கு முடித்தாராம். தஞ்சை பாபநாசத்தில் ஒருமுறை இந்துஸ்தானி இசை பாடினார். கேட்டோர் உருகி அழுதுவிட்டனர். அங்கிருந்த காஞ்சிபுரம் நாயனாப்பிள்ளை இவரைப் பன்னீரால் திருமுழுக் காட்டினராம். அடுத்து நடக்க வேண்டிய தம் இசையரங்கை ‘இன்று என் கச்சேரி எடுபடாது; நாளைக்குப் பாடுகிறேன்’ என்று சொல்லி விட்டாராம்.இசைப்பெரும் புலவர்களும் கருநாடக இசையைச் சுவைப்பதற்காக விரும்பி நாடகங் காண வருமாறு செய்தவர் கிட்டப்பா. அத்தகைய இசைத்திறனைக் கிட்டப்பாவுக்கு அளித்தவர் தாவூதுமியானே. கங்காதர அய்யர் தம் மக்களாகிய காசி அய்யரையும் கிட்டப்பாவையும் கொண்டுவந்து இசை கற்பதற்காத் தாவுதுமியானிடம் ஒப்படைத்தாராம். இவரிடம் இசை கற்றதன் காரணமாக கிட்டப்பாவின் இசையில் இடையிடையே இந்துஸ்தானி பிடி விழுவதுண்டு. காரைக்கலில் நடந்த ஓர் இசையரங்கில் தாவூதுமியானிடம் காதர்பாட்சா தோற்றுப் போனதாகக் கூறுவர். ‘அல்லாஹ¥’ என்ற பாடலைத் தாவுதுமியான் சிறப்பாகப் பாடுவாராம். அதனால் அவருக்கு ‘அல்லாஹ¥ தாவுதுமியான்’ என்ற சிறப்புப் பெயர் வழங்கியது. இவர்தம் கால்வழியினர் எவரும் இசைத் துறையில் கால் கொள்ளவில்லை. இவர் தம் மாணாக்கர்களே இப்பெருமகனாரின் பெயர் சொல்லும் எச்சங்களாக விளங்கினர். தாவுதுமியான் நாகூரில் 1940ஆம் ஆண்டு வரை வாழ்ந்திருந்தார்.

 S.M.A காதர்

தாவுதுமியானின் முதன்மை மாணாக்கனாக விளங்கியவர் இவர். தாவுதுமியானால் உருவாக்கப்பட்ட மாணவர்களில் இன்று புகழுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் S.M.A காதர் அவர்களே. முறைப்படிக் கருநாடக இசையைக் குருகுலமுறையில் பயின்று தேர்ச்சி பெற்று இசைவாணராக வளர்ந்து மரபிசையரங்குகள் மட்டுமே நடத்தி வரும் இவர் இசை மரபுகளில் அழுத்தமான பற்றுடையவர். இவர் பிறந்தது 1923 டிசம்பரில். 25.8.1952இல் இவர் ‘நாகூர் தர்கா வித்துவான்’ என்ற சிறப்புப் பதவி அளிக்கப் பெற்றார். செவ்விசை மரபைச் சிறிதும் மீற விரும்பாத இவர் தம் இசையரங்கை இசையறைவுள்ள பத்துப் பேர் கேட்டால் போதும் என்பார். மதுரை சோமு பாடும்போது சில சமயம் படே குலாம் அலிகான் பாடுவது போல இருக்கும். அதுபோல் இவரது இசையிலும் இந்துதானி சாயல் காணப்படுகிறது. இது அவர் தம் ஆசிரியர் வழி வந்த சாயலாகும்.

மரபிசையைச் சுவைப்போரும் மதிப்போரும் அருகிவரும் நிலையாலும், இசுலாமியர் என்ற காரணத்தால் இவர்தம் இசைத் திறனைப் பலரும் சரியாக அறிந்து கொள்ளாததாலும், செவ்விசை மரபுகளைச் சிறிதும் தளர்த்த விரும்பாத இவர்தம் கொள்கையாலும் இவர்தம் இசையரங்குகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இக்காலத்து முதல் தரமான இசைவாணர்களில் ஒருவராக விளங்கும் இவர் சில தமிழ் உருப்படிகளையும் இயற்றிப் பாடியிருக்கிறார். ‘வாரரோ வாராரோ ஞானக் கிளியே’ என்ற பாடல் நாட்டுப்புறப் பாடலாகிய கும்மி அமைப்பில் இவர் இயற்றிப் பாடிய பாடல். கொலம்பியா இசைத்தட்டில் இது பதிவு செய்து வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கில் விற்கப்பட்ட கொலம்பியா இசைத்தட்டுகளில் இதுவும் ஒன்று. குணங்குடியார் , ஆரிபு நாவலர், புலவர் ஆபிதீன், பண்டிட் உசேன், வண்ணக்களஞ்சிய ஹமீதுப் புலவர், கவிஞர் சலீம், மலையாளம் காலகவிப் புலவர், காசிம் புலவர், உமறுப் புலவர் ஆகியஞிசுலாமியப் புலவர்களின் பாடல்களை இசைத்தட்டுகளில் பாடியது மட்டுமின்றி தியாகராசர் கீர்த்தனைகளையும் இசைத்தட்டுகளில் பாடியிருக்கிறார். ‘சேது சாரா’ என்ற பைரவி இராக ஆதிதாள உருப்படி ஒரு முஸ்லிம் இசைவாணர் பாடிப் பதிவு செய்த முதல் தியாகராசர் கீர்த்தனை என்ற பெருமையை உடையது. ‘காரண நபியே’ என்ற அம்சத்வனி இராகப் பாடலுக்குக் குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசித்திருக்கிறார். உமறுப் புலவர் இஸ்லாத்தைத் தழுவிய வரலாற்றுச்சுருக்கம் ஆரிபு நாவலரால் இயற்றப்பட்டது. இதனை இராகதாள மாலிகையில் இவர் பாடியுள்ள இசைத்தட்டு உண்டு. இதில் பாகேசீரி, மோகனம், சஹானா, மால்கோஸ், சுபபந்துவராளி ஆகிய இராகங்களும், ஆதி, மிசிர சாப்பு, தேசாதி, திசிரஏகம் ஆகிய தாளங்களும் கலந்து வரும்படி பாடியது குறிப்பிடித்தக்கது. இக்காலத்தில் இராகமாலிகையைக் காணலாம். தாளமாலிகையைக் காண்பது அரிது.

இவர்தம் பாடல்கள் பதிவு செய்த ஒலி நாடாக்களும் உண்டு. அவற்றிலும் இசுலாமியப் பாடல்களுடன் பாபனாசம் சிவன் போன்றோரின் இந்துமதத் தமிழ்ப் பாடல்களும் உள்ளன.

இவரிடம் இசை பயின்ற மாணாக்கர்கள் ஏராளம். எனினும் அவர்களிற் பெரும்பாலோர் கீதம், வர்ணம் என்ற அளவில் நிறுத்திக் கொண்டவர்தாம். எம்.எம். ஈசுப் என்ற மாணவர்தாம் 7,8 ஆண்டுகள் தொடர்ந்து இசை பயின்றார். அவர் சென்னை அண்ணாமலை மன்றத்தில் ‘இசை மணி’ என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப் பெற்றார். இவருடன் இசைமணிப் பட்டம் பெற்றவர்களில் சீர்காழி கோவிந்தராசனும் ஒருவர்.

emhaniffa.jpg

நாகூர் ஈ.எம். ஹனீபா

இசைமுரசு, அருளிசை அரசு, கலைமாமணி முதலிய பட்டங்களைக் குவித்துள்ள ஈ.எம்.ஹனீபா இசுலாமிய மெல்லிசையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து வருகிறார். இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன் முகவை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு நாகூரே இளமை முதல் வாழிடமாக அமைந்து விட்டது. காரைக்கால் ஏ.எம்.தாவுது போன்றோர்களின் இசையரங்க நிகழ்ச்சிகளைக் கேட்டதனால் இளமை முதலே எழுச்சி பெற்றுப் பாடி வருகிறார். நுண்ணுணர்வும் கேள்வியறிவும் நிரம்பவுடைய இவருக்கு முறையான இசைப் பயிற்சி தேவைப் படவில்லை. 70 அகவைக்குப் பிறகும் இவருக்கே இயல்பான குரல் வளமும் தெளிவான தமிழ் ஒலிப்பும் சற்றும் குறையாமை வியப்புக்குரிய ஒன்று.

ஹாங்காக், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இசை மழை பொழிந்துள்ளது இவ்வின்னிசைக் கொண்டல். நாளும் இன்னிசையால் நபிகள் புகழையும், திருக் குர்ஆனையும், திராவிட இயக்கத்தையும் பரப்பி வரும் இவர்தம் இசையரங்குகள் பொதுக் கூட்டங்களிலும், இல்லச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மிகுதியாக இடம் பெறும். இவர் பாடலிலும் மரபுபிறழாத உருப்படிகள் உண்டு. மெல்லிசைப் பாடல்களும் கர்னாடக இசை மரபின் சாயல் மிகுந்தவையே.

கழகம் இட்ட கட்டளைப் படிக் கைத்தறித் துணியை விற்ற போதும், சிறைப் பறவையாய் வாழ்ந்த போதும் பாடும் பணியே பணியாய் இருந்தார்.

பேரறிஞர் அண்ணா , காயிதே மில்லத் ஆகியோர் விரும்பிக் கேட்ட பெருமையுடைய பாடல் இவருடையது. இவர்தம் ‘இறைவனிடம் கையேந்துங்கள் – அவன் இல்லை என்று சொல்லுவதில்லை’ , ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா ‘ முதலிய பெயர் பெற்ற பாடல்கள் 500க்கு மேற்பட்ட இசைத் தட்டுகளிலும் ஒலிநாடக்களிலும் பதிவாகி தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் இனிது ஒலித்து வருகின்றன.

நன்றி : முனைவர் இரா.திருமுருகன்

நாகூர் ஹனிபா, அவர் ஒரு சரித்திரம் – அப்துல் கையும் (திண்ணை)

**

Musicians of Nagore

1. S.M.A. Kader

 smakader2He is one of the rare gems of Nagore. He is the ony Muslim Karnatic Vocalist available in Tamil Nadu. To listen to him is a memorable experience. It is clear from close observation that Mr. SMA Kader is a self made musician who has ignored all opposition from close and distant quarters.

His Ustad was the great vocalist and Harmonium Mastro Vidhvan Dawud Miyan Khan Sahib of Nagore.

Ustad Dawud Miyan was no ordinary musician. Piety and extraordinary performance went hand in hand with him and his Masters the Great Ustad Chotu Miyan and Nannu Mian Sahibs of Nagore. In his last days Ustad Dawud Miyan Khan suffered from a disease of the leg which was musically cured by the order or Qadir Wali of Nagore. He was staying in Dargah and in a dream Qadir Wali asked him to sing the raga of Malgos which he did and as an effect, was gradually cured of the disease.

One can clearly understand SMA Kader’s greatness if one knows that the great Kittappa also learned from Ustad Dawud Miyan. Mr SMA Kader is perhaps the last of Ustad Dawud Miyan’s disciples. Though the ustad was a master of both Hindustani and Karnatic Music, Mr. SMA Kader learned only the later.

It should be noted that at present , perhaps there are in Tamil Nadu, a few who can pour out swaras while singing in three ‘Kaalams’, as Mr. SMA Kader does. Jealosy may be one of the reason for the very few HMV records of Kadir’s songs, released so far. And a few audio cassettes, out of his own efforts.

Mr. SMA Kader was made the ‘Asthaana Dargah Sangetha Vidwan‘ long back. It is a honorary title which alone he has earned. He has not produced any remarkable disciple except one ‘Isaimani’ Yusuf.

One can listen to SMA Kader on the 8th day of Nagore Urus, inside Dargah, every year, and forget one’s worries by the soul’s food.

It is humorously said that music made him a rich man because he was a richer man before that !

 

2. ‘Isai Murasu’ Haji E.M. Haniffa

gulmohd.jpg

3. Haji E. Gul Muhammad

He was born on 14.2.1946 to Ebrahim Sahib and Sabiya Beevi. The Title ‘Innisai Sudar’ was given in 1974 at Penang. Perfomed more than 1000 Concerts & released 4 cassettes.. Sangeetha has released his CD.

4. ‘Isai Mani’ M.M.Yusoff (Desciple of SMA Kader)

5. Late M. Kader ( Sethan)

sethan 

A multi faceted talent. He was a Singer, Music Composer, Poet, Play Writer & Photographer

***

தொடர்புடைய  சுட்டிகள் :

இசையும் இறைவனும் - நாகூர் ரூமி 

சூஃபி ஞானி குனங்குடி மஸ்த்தான் -சூஃபித் தத்துவமும் இசையும் – நா. மம்மது

 

சதாரா மாலதி

malathi.jpg 

மாலதி 

வீடு

மர நிழல்,வேலியோரத்துப்பூ,ஆற்றங்கரை இப்படி எதுவுமே அறியாத ‘நகர விளைச்சல் ‘ நான்.அதுவும் அழுக்கு நகரத்தின் ஆபாசப் புழுதி படிந்த பிரஜை.

வீடு என்றால் விடுதலையாம். கை காலை நீட்டி ஆசுவாசம் பெறுவது வீடு என்கிற இடத்திலாம். இப்படியெல்லாம் யார் யாரோ எழுதிப் படித்த ஞாபகம்.இவர்கள் வீடெல்லாம் ரொம்ப நன்றாயிருந்திருக்க வேண்டுமென்று நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

முத்துக் குளிக்க முங்குபவரைப் போல ‘தம் ‘ பிடித்துக் கூடியவரை குறைந்த அளவு நேரத்தை நான் வீட்டில் கழித்திருக்கிறேன்.சின்ன இடைவெளி கிடைத்தாலும் பரந்த வெளி உலகில் கலந்து விடத்துடித்திருக்கிறேன். யாராவது கேட்கலாம். என் வீடென்ன அப்படி முள்ளாய்க் குத்தும்படி அன்பில்லாத மனிதர் கொண்டதா ? உறவில்லாத சூழலா ? என்று. இல்லையே !

வீடு வீடாவதற்கு அதில் வசிக்கும் மனிதர்களின் பிரயாசைகள் முக்கியம் என்று சொல்வார்கள். நான் சொல்வேன் மனிதன் மனிதனாவதற்கு வீட்டுடைய அமைப்பும் அம்சமும் முக்கியமென்று.

உணவு,உடை, உறையுள் ..இவற்றுள் உறையுள்ளுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்பது என் அபிப்பிராயம்.

நினைவு தெரிந்த நாள் முதல் தூசி தூசி தூசி தான் சென்னையில் நான் வசித்தது ஹார்பருக்கும் பிராட்வேக்கும் இடைப்பட்ட பகுதியான மண்ணடி. இளமை ஞாபகங்கள் எல்லாவற்றிலுமே சாக்கடை நாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை. தொடர் நினைவுகளாகப் பாசி , அசிங்கமான குளியலறை ,நரகல் மிதக்கின்ற , மேலெல்லாம் படிந்த முழு இருட்டு டாய்லட்.. சிம்னி விளக்கோடு தான் பகலிலும் போகும்படி.

தி. ஜானகிராமனின் மூன்று கட்டு வீட்டு வர்ணங்களை த் தஞ்சைப் பின்னணியோடு வாசித்திருக்கிறேன். அவர் செய்த தவம் உயர்ந்த பின்னணிகளை எழுதவாவது முடிந்தது. நான் நகரத்தின் வறுமைக் கோட்டுக்குக் கீழெ பார்த்ததெல்லாம் கட்டை வண்டிகள், உழைப்பாளிகள், மூச்சிறைக்கப் பாரம் சுமந்த விலங்குகள், ஹார்பர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி மூளை சிதறிய பாட்டாளிகள் , ‘ரேவு ‘ கரையோரம் பருப்பு மூட்டைகளில் கோணி ஊசி யிறக்கித் திருடிக் கடை விரிக்கும் குடிசைப் பெண்கள்,நடை பாதை வாழ் மக்கள், ‘பம்பரக்கண்ணாலே ‘ பாடிய சேரி வாழ் பரமேஸ்வரி, மூக்குப் பொடி போடும் லிங்கிச்செட்டித்தெரு மசூதி அருகாமை முஸ்லிம் பெண்கள், டஜன் டஜனாகப் பிள்ளை பெறும் ஜெரினா அம்மா , சுருட்டு பிடிக்கும் முத்துபேகம்….

எதற்குச் சொல்கிறேன் என்றால் கோட்டைக் கொத்தளப் பின்னணி இல்லாவிட்டலும் ,சின்னவீடு, கேட் , தோட்டம் என்று வர்ணிக்கவாவது ஒரு வீடு என் மனசில் நிற்க வேண்டுமே! ம்ஹூம்…இல்லவேயில்லை. வீட்டுக்குள் வாழ்ந்திராத எனக்கு வீட்டைப் பற்றி எதுவுமே எழுதத் தெரியவில்லை.நான் அமர்ந்தது, ஆடியது, பாடியது, எழுதியது, படித்தது, எல்லாம், மல்லிகேச்வரர் கோயில் பிரகாரம், ‘அம்போ ‘ என்று தனித்து விடப்பட்டிருந்த மூலைப் பிள்ளையார் கோயில், லிங்கிச்செட்டித்தெரு மசூதிக் குளப்படி, அரமணக்காரத்தெரு ச்ர்ச்கேட் பள்ளம் , கச்சாலிஸ்வரர் கோயில் அக்ரஹாரத்திண்ணைகள் ,பாரி முனை ப்ஸ் நிறுத்தம் , இன்னும் நிறைய இடங்கள்.

[இன்னும் கூட கனவுகளில் அரமணக்காரத்தெருவை ஓடிக் கடக்கிறேன்]

நான் வசித்தது கூவ நதிக்கரைச் சேரியாக இருந்தால் சத்யஜித்ரே பாணியில் உண்மைக்கதை தந்திருப்பேன். கூவநதிக்கரைக் குப்பங்களில் நான் வசிக்கவில்லை. அதை விட மோசமான சேரி ஒன்று சென்னையில் உண்டு. கூவ நதி ஓரங்களாவது வெயில் கண்டு நாற்றமும் அழுகலும் காய்ந்து வீரியம் குறையும். நான் வசித்த சேரி பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்புச்சேரி. மூடி மூடி மறைத்து நாற்றமும் அழுக்குமாய் உள் வைத்துப் பூட்டிய உயர் வகுப்புச் சேரி.

புறக்குப்பை வழுக்கலோடு கப்பல் கப்பலாய் அகத்திலும் தூசையும் குப்பையையும் பாசிப்புழுத்தல் நரகல் அனைத்தையும் சுமந்து மனிதர் வாழும் சேரி. அந்தணச்சேரி.

எனக்கு நினைவு தெரிந்து என் முதல் விளையாட்டுத் தோழன் ஜெயிலுக்குப் போனவன் மகன். கடன் பட்டு மீள முடியாமல் ஜெயிலுக்குப் போனதாகச் சொல்வார்கள்.பெரிய வீட்டின் இருட்டுப் பொந்தான பின்புறம் அது. முன்புறம் ஒரு டாக்டரின் கிளினிக் இருந்தது. பேஷண்ட்ஸ் உபயோகிக்கும் டாய்லட்டையே நாங்களும் உபயோகிக்க வேண்டியிருந்தது. அ..அந்த ஜெயிலுக்குப் போன அப்பா எதாவது வெட்டு கொலை பண்ணியிருந்தால் கூட எனக்கு கெளரவமாகத் தோன்றியிருக்கும். அவர் கடன் கொடுக்க இயலாமல் போனது என் சொந்த அவமானம் போல என் ஆறாவது வயதில் எனக்குப் ட்டது.

நாங்கள் இருந்த முரட்டு மூன்று மாடிக் கட்டிடத்தின் மாடிகளில் நாகரிகமான பெரிய குடும்பங்களிருந்தன.[டாக்டர் கோதண்டராமையரின் பேத்தி பிரமராவை சமீபத்தில் ஜெய்ப்பூரில் சந்தித்துப் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன். ஏழைகளுக்கு உதவுகிற பெரும்போக்குடைய மிக நல்ல குடும்பம் அவர்களுடையது.]மாடிகளின் சாக்கடைகள் எல்லாம் எங்கள் பின்கட்டுக் குடியிருப்பில் தான் சங்கமம்.மாடிக் குடியிருப்புகளுக்கு முத்து, கொட்டை கட்டி என்று இரு வேலையாட்கள் இருபத்து நான்கு மணி நேரமும் போரிங் பைப் அடித்து வருவார்கள். அந்த நாளில் ஆள் கொண்டு அடிக்கவைத்துதான் போரிங் பைப்பில் நீரை மேலே ஏற்ற முடியும். மோட்டார் எல்லாம் வரவில்லையோ வேறே என்ன காரணமோ! தெரியவில்லை. சாக்கடை நாற்றமென்றால் அப்படி இப்படியில்லை. குடலையே பிடுங்குவது போல கும்பி நாற்றம்.பின்னால் மாட்டுக் கொட்டிலும் கொல்லை சந்தும் உண்டு[மாடுகள் இல்லை}சந்தில் ஒரு பேய் இருப்பதாக ரொம்ப பிரசித்தி. வேலைக்காரர்கள் கொட்டிலில் படுத்தால் நெஞ்சில் அமர்ந்து அமுக்குமாம். நானும் ஆனவரை தேடிப் பார்த்தேன். பேயின் தரிசனம் கடைசிவரை எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பத்தாவது வயதில் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். ஆளை அமுக்குவதெல்லம் சாக்கடை நாற்றம் தான். பேய் இல்லவேயில்லை என்ற யதார்த்தமான முடிவு எனக்கு சோகம் கொடுத்தது. [பின்னாளில் தைரியமும் தான்.பெங்களூர் சேம்பர் ஆப் காமர்ஸ் பில்டிங் மூன்றாவது மாடிப்பேய்,காஜியாபாத் ஹாஸ்டல் பேய் ,இவற்றையெல்லாம் ஒண்டியாகச் சமாளித்த தைரியத்தை மேற்படி முடிவு தானெ தந்திருக்கமுடியும் ?]

என்னுடன் செட்டி ஸ்கூலில் படித்த ருக்மணி பல நாள் சாப்பிடவேயில்லை என்பாள். எப்படிப் பசிக்கும் என்று எனக்குத்தெரிந்திருக்கவில்லை. என்னைப் பசிக்காமல் காப்பாற்றத்தான் என் தாய் தந்தை பின்கட்டு வீட்டை சகித்துவந்தார்கள் என்பது அப்போது புரிந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியவில்லை.சாப்பாடு பெரியவிஷயம் என்று எனக்குத்தோன்றியதில்லை அப்போது. ருக்மணியோடு அவள் வீட்டுக்குப் போயிருந்த போது எனக்குப் பொறாமை மிகுத்தது.ருக்மணி வீட்டில் சிவப்புத்திண்ணைகளும் பெரிய கூடமும், தூண்கள் வந்த உயரமான தாழ்வாரமும் நடு முற்றமும் ரொம்ப அழகு. அவள் அப்பா பெரியப்பாக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்தாம். தம்புச் செட்டித் தெருவில் வெண்ணைக் கடையை அடுத்து நீண்ட சந்துக்குள் நுழைந்தால் வலது திருப்பத்தில் சடக்கென்று வந்துவிடும். அதில் தான் முதுகு கூனலான ருக்மணியின் கோம்பைத்தங்கை ,கால் வராத தம்பி மற்றும் அதே சாயலில் எண்ணிக்கை தவறும் அளவுக்கு ச் சிறிதும் பெரிதுமாய் நிறைய குழந்தைகள் வசித்தார்கள்..

அந்த வீட்டில் பெரிய ஆண்பிள்ளைகள் படுத்த படுக்கையாய் இருந்தார்கள். பெண்கள் எப்போதும் உட்கார்ந்தே இருந்தார்கள்.என்னுடைய அம்மா சுறு சுறுவென்றிருப்பாள். சதா வேலை செய்வாள்.

ருக்மணி வீட்டில் என்ன கஷ்டம் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் என் உணவையும் நோட்டுப் புத்தகங்ளையும் அவளோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.ருக்மணி வீட்டை விட்டு வெளியே வரும்போது வீட்டு ஆட்கள் யாரையும் பார்க்கப் பிடிக்காமல் கம்பீரமாக வெளியே வருவேன்.

சாப்பிட ஒன்றுமில்லாவிட்டல் கஷ்டம் என்பது எனக்கு உறைக்காத அளவுக்கு இருந்தன என் அம்மா செய்யும் மஞ்சள் கலர் பொங்கல் புளிப் பச்சிடி பருப்புத் துவையல் ரசம் ,இவையெல்லாம். ருக்மணி ருசித்து முகமலர்ந்து சாப்பிடும் போது அந்த ரசனையின் மர்மம் புரியாமல் வியந்து பார்ப்பேன்.

சாப்பிட நிறையக் கிடைத்திருந்தது என் குட்டிக்குடும்பத்துக்கு. வீடு மட்டும் நல்லதாகக் கிடைக்கவேயில்லை. நரகம் போன்ற இருட்டு கவ்விய அந்தப் பின்கட்டு வீட்டைவிட்டு ஒரு ஸ்டோருக்குக் குடி போனோம். இதில் டாக்டர் வீட்டு பாத்ரூம்களில் போல உதிரமும் பஞ்சும் ஒருவித நெடியும் , மஞ்சள்கறை படிந்த பீங்கான்,எச்சில் குப்பி மூத்திரப் பாத்திரம் ரத்தம் உறிஞ்ச அட்டைகளுடன்….இல்லை. நாற்றம் குடலை உருவும் நாசகாரப் பிரதேசங்கள் இல்லை. மொட்டைமாடி இருந்தது. புறாக்கூடு போன்ற சின்ன சின்ன போர்ஷன்களும் பொதுவான குளியலறை டாய்லட்டும் இருந்தன. ஸ்டோரில் சுமார் நூறு பேருக்கு மேல் வசித்தார்கள். ஆணும் பெண்ணுமாய். அவல வாழ்க்கை. சுற்றுப் புறத்தை அசிங்கப் படுத்தி தம் தம் போர்ஷன்களைச் சுத்தமாய் வைத்துக் கொண்டார்கள். சுறுசுறுப்போடு சினிமா போய் வந்தார்கள் பிரபாத் பிராட்வே கொட்டகைகளில். சமையல்காரர்கள்,புரோகிதர்கள்,புரோக்கர்கள்,பிளாட்பார டைப்பிஸ்டுக்கள் என்பது போல பல அலுவல் காரர்கள். அத்தனை பேரும் அந்தணர்கள். தோளுக்கும் இடுப்புக்குமான அழுக்கு நூலைத் தவிர அந்தணக் குணம் எதுவுமே அறியாதவர்கள். தப்பு, தப்பு… அப்படிச் சொல்லிவிட முடியாது. அந்தணருக்கே உரிய கோழைத்தனமும் வலியாரைக் கண்டால் காட்டுகிற பசப்பும் அத்தனை பேருக்கும் இருந்ததே!

ஸ்டோர் குடித்தனங்களில் எல்லா வகைத்துயரமும் வக்கிரங்களுமிருந்தன.உடம்பில் பதினெட்டு வளைசல் கொண்ட பொன்னக்காக் கிழவி, வயதுக்கு வந்த அரைப் பைத்தியப் பெண்,வயதான கன்னிப்பெண்கள்,அவர்கள் வீட்டுக்கு தினப்படி கைப்பையுடன்வருகை தரும் ரெகுலர் ராத்திரி விசிட்டர், மெஸ் வைத்து இளைஞருக்குச் சாதம் போட்டு த் தன் பெண்களுக்குக் காதல் திருமணம் அமையாதா என்று ஏங்கிய தாய், தன் மூன்று குழந்தைகளுக்கும் பேச்சு வராமல் பரிதவித்த பெற்றோர், மனைவியைப் பறி கொடுத்து பிள்ளைகளோடு பாடு பட்ட தந்தை,ஒரு பெரிய மனிதனின் சின்னக் குடித்தனம், இப்படி எத்தனையோ!

ஆண்பிள்ளைகளில் ஒருவனும் குடிகாரன் அல்லன். ஆனால் குணக்கேடன். எந்த நல்ல அம்சத்தையும் ரசித்து ஏற்றுக்கொள்ள இயலாத அளவுக்கு அந்த ஆண்களின் உடல்களில் விரசங்கள் புரையோடியிருந்தன.நிறைய காட்டன் மார்க்கெட்டு கேஸ்கள்,நிறைய அவுட்டுப் பேச்சு,வெத்துவேட்டுக்கள்,திண்ணை தூங்கிகள்.

பெண்களிடையே மெலிதான விபச்சாரமிருந்தது. அப்பட்டமில்லாத அரசல் புரசல் விபச்சாரம். குணக்கேடான சமாச்சாரங்கள் அவ்வப்போது கண்ணீல் பட்டவாறு இருந்தன. அவசரக் கல்யாணங்கள் நடந்தன. பத்து மாதங்களுக்குள்ளான குழந்தை வரங்கள் கிடைத்தன. யாரோ ஒருவனின் மனைவி இன்னொருவனோடு பாத்ரூமிலிருந்து அரையிருட்டில் வெளிவந்ததைப் பார்த்த சாட்சியங்களிருந்தன. நிறையப் பையன்கள் ஓடிப் போனார்கள். பெண்கள் வயதுக்கு வந்தார்கள். ஒரு நல்ல அம்சம் அந்தணச் சேரியில். எந்தப் பையனும் நிச்சயமாக எந்தப் பெண்ணையாவது இழுத்துக் கொண்டு ஓடிவிட மாட்டான். அந்த பலம் எங்கள் சமூகத்து ஆண்பிள்ளை முதுகில் வந்ததே கிடையாது. அதனால் தான் எல்லாப் பெண்களும் எங்கள் வீடுகளில் முப்பத்திரண்டு வயசு வரை கன்னியாகவே மனசு கெட்டு இருந்து வந்தார்கள் பத்திரமாக.

‘செளதாவுக்கு மார் அழகே போதும் ‘ என்பது மாதிரியான பேச்சுக்களை நடுக்கூடத்தில் பேசுகிற இல்லத்தரசிகளால் தானோ என்னாவோ விடலைகளின் பார்வைகளீல் சேஷ்டைகளில் விபரீதம் கலந்திருந்தது.

யாரோ எனக்குக் காதல் கடிதம் எழுத நானும் கவிதை வசப்பட என் தாய் தந்தை பயந்து போய் தாத்தா வீட்டில் சரண் புகுந்தார்கள்.

குத்து மதிப்பாய் ஒரு வாடகையையும் நாங்கள் சாப்பிடத் தயாரிக்கப் பட்ட உணவில் பெரும்பகுதியையும் எங்கள் சண்டைக்காரச் சித்திகள் கூட்டம் ஜீரணித்தது. என் தாயும் தகப்பனும் எப்போதும் போல ஏழையாகவே இருந்தனர். அவர்கள் அப்படி ஏழையாய் இருப்பதற்கு இன்னின்ன காரணங்கள் என்பதை என் தாத்தா வீடு வரிசையிட்டுச் சொல்லியும் என் பெற்றோர்கள் பரோபகாரங்களைக் குறைத்துக் கொள்ளவில்லை அத்தை குடும்பத்துக்குச் செய்வதையும் நிறுத்திக் கொள்ளவில்லை. என் தாயும் சொத்தில் தன் பங்கைக் கேட்டுச் சித்திமார்களின் கொழுப்பை அடக்கவேயில்லை. கேளாமல் கொடுக்கப் படுவது மட்டுமே ஏற்கப் படும் என்ற கொள்கை. இப்படி அப்படியாக நான் மாநிலக்கல்லூரியில் எம் எஸ்ஸி முடித்த வருடம் விஜிபி தவணை முறையில் ஒரு மர்பி மினி பாய் டிரான்ஸிஸ்டர் வாங்குமளவுக்குப் பணக்காரர்களானோம்.

பின்னால் வேற்று மாநிலங்களில் பெரிய நகரங்களில் குடியிருந்தேன். குளிருக்கு அடைத்துக் கட்டப்பட்ட சமையல் அறைகளிலும் குளியல் அறைகளிலும் மூச்சு விட முடியாமல் அவஸ்தைப் பட்டேன். நான் உப்புமாவுக்குத் தாளித்து விட்டால் போதும். வீட்டின் எந்த மூலைக்கு வந்தாலும் உப்புமா வாசம் மணிக் கணக்கில் நின்றது. மோர் மிளகாய் வறுத்து விட்டால் தீர்ந்தது.

ஆதியில் வீட்டை விட்டு வெளியே ஓடினால் நூலகமே புகலாயிருந்தது எனக்கு. மறைமலையடிகள் நூலகம் முதல் பல நூலகங்கள் நடை தூரத்தில் இருந்தன. இப்போதெல்லாம் அண்மையில் நூலகமே வாய்ப்பதில்லை. மாலைகளில் கோகலே ஹாலில் இலக்கியச்சொற்பொழிவுகளுக்குப் போக முடியும் . க.த. திருநாவுக்கரசு இன்றும் காதில் ஒலிக்கிறார். நடக்கிற தூரத்தில் அண்ணாமலை மன்றம். சோ ,பாலச்சந்தர் நாடகங்கள், மனோகர் மேடையதிசயங்கள் [பத்மா மாமி ஸீஸன் டிக்கட் உபயம்] கச்சாலீச்வரர் கொயிலில் கதா காலட்சேபங்கள் இப்படி எத்தனையோ கிடைத்தன வெளியில்.. இப்போதைய பெரிய நகரங்களில் மாலை வாழ்க்கை மத்திய தரத்தினருக்கு வெகுவாக மறுக்கப் படுகிறது.

சென்னை வரும் நாட்களில் கடற்கரை தேட நினைத்ததுண்டு. கரையோரச் சமாச்சாரங்கள் கடலையே மறக்க வைத்தன.சுத்தமான சூழலுக்காக மனிதன் தன் ஆயுள் நாள் சேமிப்பைத் தர வேண்டிய காலம் வந்துவிட்டது.

சுமாராக அந்தஸ்து[ ?] வந்த கால கட்டத்திலும் ஏதோ கவனக் குறைவு. காலத்தின் கட்டாயம். இரு வருடங்களுக்கு ஒரு சிமெண்டுக் கிடங்குக்கு அருகில் வசிக்க நேர்ந்தது. சிமெண்டின் நுண்ணிய துகள்கள் வீடு முழுவதும் ஒரு பூச்சு போல,இறையுணர்வு போல படர்ந்து போயின. எப்போதும் கரண்டு கட் வேறு. முழு இருட்டு டாக்டர் வீட்டுப் பின்கட்டை நினைவு படுத்தியது. வாசலில் ஒரு சொறி நாய் வேறு படுப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தது. அதற்கு வந்திருந்ததைப் போன்ற சொறியை நான் கண்டதேயில்லை. கறுப்பு நிற ரோமம் முழுக்க உதிர்ந்து ,ஒரு முழு அப்பள வடிவில் கொதகொதவென்று சிவப்பு மாமிசம் வெளித் தெரிந்தது. அத்தனைக்கும் அந்த நாய் அலட்டவேயில்லை. லேசான முனகலோடு சரி. என் வீட்டுப் படி தவிர வேறு எந்தப் படியருகிலும் அது போனதுமில்லை.

இந்த வீட்டைத் துறந்து அடுத்த வீட்டுக்கு என் சம்பளத்தில் பாதியை வாடகையாய்க் கொடுக்கத் துணிந்த போது வீட்டில் யாருக்கும் இஷ்டமில்லை. எனக்கு சுவாசம் தான் அப்போது முக்கியமானதாயிருந்தது.

இவ்வளவுக்கும் ஒரு வீட்டைக் கட்டியிருக்கக் கூடாதா என்று கேட்பிர்கள். கட்டினேனே!புற நகரில் பார்த்தீனியம் சூழலில் இருந்த என் வீட்டுக்குள் நான் காலை வைத்த நிமிடமே எனக்கு ஆஸ்துமா வந்தது. ஆக்ஸிஜன் வைக்க வேண்டி வந்தது. விட்டுப் பிரிந்தேன் என் வீட்டை.

ஆக மொத்தம் கண்ணுக்கு அசிங்கமான அத்தனையையும், கருப்பு,மஞ்சள், பச்சை,சிவப்பு நிறங்களில் பார்த்து விட்டேன். மூக்குக்குப் பிடித்தமில்லாத அவ்வளவு நாற்றங்களையும் அனுபவித்தாகி விட்டது.

உதறிய சாக்குத் தூசு, கோலமாவுத்தூசு, மாடியிலிருந்து விழும் குப்பைத்தூசு, சாம்பல் தூசு, சிமெண்டுத் தூசு,ஓடும் வண்டிகள் கிளப்பிய தூசு, அரிசி பருப்பு புடைத்த தூசு, காரை விழும் தூசு, ஓட்டு மேலண்ணத்தூசு, மாடிப்படி,கைப்பிடி, கேட் கதவுகளில் உட்கார்ந்து கையில் நறநறக்கும் தூசு,இப்படி தூசிலேயே வாழ்ந்திருக்கிறேன்.

மனிதனுக்குப் பசிக்கு உணவு போதும். உடுக்க ஏதோ போதும். உறையுள் உடல் வாழ மட்டும் போதாது. உள்ளமும் வாழுமளவு வசதியான உறையுள் வேண்டும். அது தான் ‘வீடு ‘

மாலதி[ சென்னை மாநகரம் பற்றின The Unhurried city யில் ஆங்கில மொழியாக்கம் வெளியிடப்பட்டுள்ளது]

நன்றி : திண்ணை

***

கனவுகள், காட்டாறுகள்..!-’சதாரா’ மாலதியின் கவிதைகள்
லதா ராமகிருஷ்ணன்
 

‘எல்லாத் தகுதிகளும் இருந்தும் அதிகம் அங்கீகரிக்கப்படாத மரமல்லிகைகளை எப்போது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் வேதனைப்படுவேன். மில்லிங்டோனியா என்ற பெயர் கொண்ட மரமல்லிகை மணம் மிக்க கொத்துமல்லிகைகளை மிக உயரத்தில் வைத்துக் கொண்டு காத்திருக்கும்’

‘வரிக்குதிரை(1999), தணல் கொடிப் பூக்கள்(2001) ஆகிய இரண்டு தொகுப்புகளுக்குப் பிறகு 2003ல் வெளியான ‘மரமல்லிகைகள்’ ‘சதாரா’ மாலதியின் மூன்றாவது தொகுப்பு அதன் முன்னுரையில் மேற்கண்டவாறு கவிஞர் குறிப்பிட்டுள்ளார். சதாரா மாலதி தனது எழுத்துக்கள் மூலம் திண்ணை வாசகர்களுக்கும், வேறு பல இணைய இதழ்களின் வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமானவரே. 1950ல் பிறந்த இவர் மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலியிலுள்ள கிராமமொன்றில் பிறந்த சதாரா மாலதி மத்திய அரசுப் பணியில் உயர் பதவியில் இருந்து சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். 90 கள் வரை வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்த இவர் 90களின் இறுதிப் பகுதியில் தான் தமிழ்ச் சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கினார் என்றாலும் ஏறத்தாழ பத்து வருடங்களில் கவிதைகள், சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் என்று சிறுபத்திரிகைகளில் அவருடைய எழுத்துக்கள் கணிசமான அளவு வெளியாகியிருக்கின்றன; வெளியாகி வருகின்றன. மேற்குறிப்பிட்ட கவிதைத் தொகுப்புக்களோடு கூட ‘அனாமதேயக் கரைகள்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பும், ‘உயர்பாவை’ என்ற தலைப்பில் ‘ஆண்டாள் திருப்பாவை’ குறித்த ஆழ்ந்த ஆய்வலசல் கட்டுரைகளும் ( இவை திண்ணை இதழ்களில் தொடராக வெளிவந்தன) இவருடைய படைப்புக்களாக இதுகாறும் வெளியாகியுள்ளன. இவருடைய தாயார் திருமதி லலிதா நாராயணன் இதுகாறும் எழுதிவந்திருக்கும் சிறுகதைகளில் சில சமீபத்தில் இரண்டு தொகுப்புக்களாக வெளியாகியுள்ளதும் இத்தருணத்தில் குறிப்பிடத் தக்கது.
காத்திருப்பு என்பதன் மறுபக்கத்தில் இருப்பது தேடலும், காதலும். இந்தத் தேடலும், காதலுமே, காத்திருப்புமே ‘சதாரா’ மாலதியினுடைய கவிதைவெளியின் பிரதான நீரோட்டங்களாகப் புரிபடுகின்றன. ஒருவகையில் எல்லாக் கவிதைகளின் இயங்குதளங்களும், இயக்குவிசைகளும் தேடலும், காத்திருப்புமே என்று கூடச் சொல்லலாம். ஆனால், சில கவிதைகளில் இந்தத் தேடலும், காத்திருப்பும் தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும். அல்லது, தம்மைப் பற்றிக் குற்றவுணர்வு கொள்ளும். சதாரா மலதியின் கவிதைகளில் அவை ஆற்றொழுக்காக வெளிப்படுகின்றன எனலாம்.

நகம் மேல் விரல் விரல் மடங்கும் அங்கை
முன்கை வியக்கும் முழங்கை முழங்கை முழங்கை முதல் தோளிணை
தோளில் மாலை மாலையில் என் மணம்
என் குறவன் விருப்பிற்கு நான்
செஞ்சாந்தாய் ஆவேன்.’

விறலி என்று தலைப்பிட்ட இந்த குறுங்கவிதையில் காதலும், சந்தோஷமும் எத்தனை குதூகலமாய் வெளிப்படுகின்றன! இத்தகைய கவிதைகளின் உத்வேகத்தையும், உணர்வெழுச்சியையும் உள்வாங்கிக் கொள்ள இயலாதவர்களாய், அல்லது, உள்வாங்கிக் கொள்ள மறுப்பவர்களாய் இதை ஆணாதிக்கத்தைப் பேணும் கவிதையாய் மேம்போக்காய் பகுப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? சதாரா மாலதியின் கவிதைகள் அத்தகைய எதிர் விமரிசனங்களைப் பற்றிய கவலையோ, கிலேசமோ இல்லாமல், அந்த குறிப்பிட்ட கணத்தை ஆழ்ந்து அனுபவிக்கும் ஒரே முனைப்பாய் கிளர்ந்தெழுகின்றன! இந்த உணர்வெழுச்சி சதாரா மாலதியின் பெரும்பாலான கவிதைகளில் அவருடைய பலமாகவும், ஒரு சில கவிதைகளில் அவருடைய பலவீனமாகவும் அமைவதைக் காண முடிகிறது.

மொழிக் கல்லில்
முட்டி முட்டி
என் துயர் சொன்னேன்.
மொழி சும்மாயிருந்தது.
பனிப்போர்
அது என் நெஞ்சில்
மோதி மோதி
கவிதையாய் இறங்கியது.’
 

‘மோதல்’ என்ற சிறுகவிதையில் மோதல் என்ற ஒரு வார்த்தை contact, confrontation ஆகிய இரண்டு விஷயங்களையும் குறிப்பாலுணர்த்துவதன் மூலம் கவிதைக்கு கனம் சேர்க்கிறது. வார்த்தைகளின் கச்சிதமான தேர்வு, அவற்றின் கச்சிதமான இடப் பொருத்தம் இரண்டுமே ஒருசேர அமைந்தால் தான் கவிதையின் ‘சிற்பச் செதுக்கல்’ பூரணமாகும். ஒன்று மட்டும் இருந்து ஒன்று இல்லாமல் போய்விடும் போது அந்த இன்மையின் அளவு கவிதையும் கூர்மழுங்கியதாகி விடுகிறது.அப்படியான சில கவிதைகளையும் சதாரா மாலதியின் தொகுப்புகளில் காண முடிகிறது. இத்தகைய பூரணமற்ற கவிதைகள் இடம்பெறாத கவிதைத் தொகுப்புகளே இருக்க முடியாது என்றும் சொல்லலாம். சில கவிஞர்களின் விஷயத்தில் அவர்களுடைய ஆகச் சிறந்த கவிதைகளே ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் வெற்றிகரமாய் காண்பிக்கப்படுகின்றன; அவ்விதமாய் அவர் மேலான கவிஞராக நிலைநிறுத்தப்படுகிறார். வேறு சிலர் விஷயத்தில் நேர் எதிராக விஷயம் நடந்தேறி அவர் கவிதைகள் எளிதாக ஒரம் கட்டப்பட்டு விடுகின்றன.
எனக்கு மட்டும் ஏனிப்படி/ தேன் மெழுகுக் கூடு’ என்பது போன்ற வளமான வார்த்தைப் பிரயோகங்கள் சதாரா மாலதியின் கவிதைகளில் கணிசமாகக் கிடைக்கின்றன.
 

‘சோரம் புனிதமானது
ஏனெனில் பணம் பத்திரங்கள்
துச்சம் அதில்
பிறிதும் கண்மூடிக் காதல்
அதில் தான்
என்ற கவிதையை ‘தட்டுக்கெட்டத்தனத்தை’ப் பரிந்துரைக்கிறது என்று பொருளுரைப்பவர்களைப் பார்த்து பரிதாபப் படத்தான் வேண்டும். ‘நகை மேல் ஆணை’ என்ற கவிதை பல்வேறு அணிகலன்கள் மேல் உள்ள ஈர்ப்பையும், அவற்றை ஒதுக்கி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விளைவாய் மனம் உணரும் இழப்பையும் பதிவு செய்கிறது. நகையை விரும்புதல் பெண்ணடிமைத்தனம் என்ற முன்நிபந்தனையோடு இந்தக் கவிதையை வாசிக்கப் புகுந்தால் இதன் கவித்துவமும், லயம் ததும்பும் மொழிப் பிரயோகமும் நம்மை எட்டாமல் போய்விடும்.
மாதிரிக்குச் சில வரிகள்:-

சூடகமும் பாடகமும் தோடும்
அபரஞ்சித் தொங்கல்களும்
ஏந்தி நிறுத்திய பதக்கமும்
சரப்பளியும் காலால் அழகணிந்த
கவிதையூறும் உலோகச் சிரிப்புகளும் களைந்தேன்.’

கொலுசு என்ற கவிதையில் கொலுசைப் பறிகொடுத்த துக்கம் ஒரு பெண்ணின் ‘சுதந்திரமான இயக்கமும், அதிலுள்ள சந்தோஷமும் பறிபோகும் இழப்பைக் குறிப்பாலுணர்த்துவதாகிறது.

ரசிக்காத பயணத்தில்
களைப்போடு இழப்பு
எனக்குப் பழக்கம் தான் என்றாலும்
இந்த முறை
ரொம்ப ரொம்பவே வலித்தது.
சொன்னேனே அதைத் தாந்
என் கொலுசு தொலைந்து போயிற்று’.
 

பழந்தமிழ்ப் பரிச்சயம் நிறைய வாய்க்கப் பெற்ற சதாரா மாலதியின் கவிதைகளில் புராண, இதிகாசக் குறிப்புகளும், குறியீடுகளும் அநாயாசமாக வந்து விழுகின்றன!
 

‘இவை தாண்டி வடவாக்கினியில்
நுழைந்து மீளவும் பச்சைப் புண்ணிடை
பதிகம் தேறவும் பேச்சுக் காதுகளின்
ஊசி கோர்த்த மௌனத் துளை வழி
நெடிய வானம் காணவும்
நீ தான் நீ தான் உடன் வேண்டும்
பால் மறந்து நோயகன்றேக வேண்டும்
(போர் நீங்கிய தேசத்தின்)
‘தெள் நினைவு அறும் தொலைவில்
மனம் போக அஞ்சினேன்
சகுந்தலை விரலணியும்-
தொலைந்தது நுரை மடிப்பில்
(எதுவுமில்லை)

சுய-அலசல், சுய-விமரிசனம் செய்து கொள்ள இவர் கவிதைகள் தயங்குவதேயில்லை! அங்கீகாரத்திற்காய் ‘தான்’ அல்லாத ஒரு பிம்பத்தை தன்னுடையதாக வாசகர் மனதில் பதிய வைக்க இவர் கவிதைகள் முயற்சி செய்வதில்லை. ‘அன்புண்டு ஆண்டவன் தானில்லையென/ அநியாயப் புளுகுக்கு பயிற்சியெடுக்கவில்லை’, முதலிய பல வரிகளை உதாரணங் காட்டலாம்.

பெண்கள் உடல்களாய்
ஆண்கள் வெறும் கண்களாய்
பார்வையும் மனதும்
சதுப்புகளில் அறைபட்டு
இருட்டறை இலக்கியங்களின்
மிகும் வாழ்க்கை
வயிறுகளில்!
-என்று முடியும் கவிதை ஒரு விலகிய தொனியில் வெடிகுண்டுகளின் மத்தியிலும், இருட்டறை இலக்கியங்களின் மிகும் வாழ்க்கை வயிறுகளிலும் அறைபட்டுக் கிடக்கப் போகும் இனியான வாழ்க்கையை நமக்கு கவனப்படுத்துகிறது. அதேபோல், ‘வாழ்க்கை’ என்ற கவிதையும் நிறைவான வாசிப்பனுபவம் தருவது.

வலிகளால் பாறையைச் சமைக்க முனைந்த
சிற்பிகள் நாம். நம் வீடுகள் எல்லாம் சிறகு முளைத்துப் பறந்து
இங்குமங்கும் சுவர்களாய்
வழித்தடங்களாய், சத்திரத்துத் திண்ணைகளாய்
காத்திருப்பு இருக்கைகளாய் அமர்ந்து கொண்டன’
-என்று ஆரம்ப வரிகளிலிருந்து முடிவு வரி வரை ‘இறுக்கமே’ அதன் சிறப்பான நிகிழ்தன்மையாய் கட்டமைக்கப்பட்ட கவிதையிது. சில வரிகள் அதிகமாகத் தென்பட்டாலும் கூட, ஒவ்வொரு வாக்கியமும் தனித்தனி கவிதையாக வாசிப்பிற்கு உகந்ததாகிறது.

‘இது பதிலில்லை’ என்ற கவிதை ‘என் தோல்வி எதுவென்றால் நான் செத்தே பிறந்தது’, என்று வாழ்வின் ஆற்றாமைகளைப் பேசுகிறதென்றால் ‘உன்னிடம்’ என்ற கவிதை ‘ இழந்த உலகங்களை/ ஈடுகட்டிச் சிரிக்குமிடம்/ அந்தப் புல்லிடம் சிலிர்க்கும்/கண்ணிடம் கொள்ளூம்/ தூக்கம் போல்’ என்று இழந்த உலகங்களை மீட்டெடுத்துக் கொள்ளும் இதமான உணர்வு குறித்துப் பேசுகிறது!

எங்கோ ஒரு மனத்தின் ஒற்றை ஏரிக்குள்
இரட்டையாய் பிரிந்திருக்கும் நீர்ப்பரப்பில்
அமுதோ நஞ்சோ
ஒன்றை ஆய்ந்தெடுத்து
குளுமை தேடித் துவண்டு வீழவென்று
பறக்கும், தொடர் பறக்கும், அதுவரை
சுமை தவிர்க்க, தலை மேல் அழுத்துகின்ற
ஆணானதையெல்லாம்
அகற்றிவிடல் கூடுமேல்’
-என்ற ஆணாதிக்க எதிர்ப்பு வரிகள், ‘பறத்தல் இதன் வலி’ என்ற கவிதையில் இடம்பெறுவது. ‘பிசாசின் தன் வரலாறு’ என்ற நீள்கவிதை அதன் மொழிப் பிரயோகத்திற்கும், உள்ளடக்கத்திற்கும் குறிப்பிடத்தக்கது. சிறந்த பெண்ணியக் கவிதை,பெண்மொழிக் கவிதை எனக் கூறத்தக்கது; எனில், அப்படி யாரும் இதுவரை பொருட்படுத்திக் கூறியதாகத் தெரியவில்லை. மேலும், நவீனத் தமிழ்க் கவிதையில் நீள்கவிதை எழுதியவர்கள் குறைவு. பெண்களில் எனக்குத் தெரிந்து இவரும், திலகபாமாவும் தான் எழுதியிருக்கிறார்கள்.

‘நெடுநாளைய சேமிப்பு நிறைய கனவு
பொய்களின் அழகை வடிவை
பைக்குள் அமுக்கி விட’ (பொய்க்கடை)
இல்லாதவர் பூசின
சொல்லாத வர்ணமே
நெஞ்சில் எப்போதும்
குங்குமமாய் அப்பி (ஹோலி)
சொல்லுக்குள் கர்ப்பம் உறா உணர்வை
ஞாபகங்களில் சிறைப்படாத நரம்பை (தாண்டவம்)
படிகளில் ஏறி விட
வடிகால் அமைத்துத் தர
சேக்காளி குழு துருப்புச் சீட்டு
கோட்டைப் பொய் சேராமலே
எனக்கும் அடையாளமுண்டு
அது என் தனிக்கவிதை’ (உறுப்பிலக்கணம்)
நிறமிழந்து வானவில்
வந்து போன நெடுகிலே
தாமரை பூத்தது நெருப்புச் சட்டிகளில் (தாமதம்)
சுறாக்கள் தின்னும் மேனி
நக்கிக் கடல் புகும் (சுறாக்கள் தின்னும்)
பித்தளை அடைப்பானை ஒருவன்
கவர்ந்து செல்ல
பெரிய்ய நீர்த்தொட்டி
துளைப்பட்டது நாட்டில்
நான் நீர்த்தொட்டிக்கோ அடைப்பானுக்கோ
சொந்தக்காரியில்லை (அசட்டையாய்)
என பலப்பல வரிகளை ‘சதாரா’ மாலதியின் கவித்துவத்திற்கு எடுத்துக்காட்டுகளாகத் தரலாம். சதாரா மாலதியின் கவிதைகளில் முக்கியமான கவித்துவ அம்சமாகக் குறிப்பிட வேண்டியவை அவற்றின் பாசாங்கற்ற உணர்வெழுச்சி, அமுதனைய தமிழ், தாளகதி, மற்றும் வாழ்வின் நுட்பமும், விரிவும். எல்லாத் தொகுப்புகளையும் போலவே இவருடைய கவிதைகளிலும் ( இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு எனக்குப் படிக்கக் கிடைத்ததில்லை) நீர்த்துப் போன, உரைநடைத் தன்மை அதிகமான கவிதைகளும் காணக் கிடைக்கின்றன என்றாலும் ஒப்புநோக்க அவை அதிகமில்லை. கவிதைகளின் தொனியில், கட்டமைப்பில், மொழிவழக்கில் சதாரா மாலதி வெவ்வேறு வகைமைகளைக் கையாண்டு பார்த்திருக்கிறார். அவர் கவிதைகளில் விரவித் தெரியும் காதலும், வாழ்வீர்ப்பும் மிகுந்த கவனம் கோருபவை. காதலை முதிர்ச்சியோடு கையாளுதல் என்பதாய் முன்வைக்கப்படும் வாதத்தை போலியாக்குவதாய் காதலை அதற்குரிய அத்தனை பரவசத்தோடும், குழந்தைத்தனத்தோடும் வடித்துக் காட்டுகின்றன சதாரா மாலதியின் கவிதைகள்!
நவீன தமிழ்க் கவிதை குறித்த கருத்தரங்குகளில் தனது கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கும் சதாரா மாலதியின் கட்டுரைகளில் அவருடைய வாசிப்பின் வீச்சும், அவற்றின் வழியான ‘கவிதை பற்றிய பார்வையின் நுட்பமும் குறிப்பிடத் தக்கது.


சதாரா மாலதி மறைவு

பாவண்ணன்

தொண்ணு¡றுகளின் தொடக்கத்தில் சில கவிதைமுயற்சிகள் வழியாகவும் சிறுகதைமுயற்சிகள் வழியாகவும் தமிழில் அறிமுகமானவர் மாலதி. புதுச்சேரியைச் சேர்ந்த மாலதியும் அப்போது எழுதிக்கொண்டிருந்தார். பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக சதாரா மாலதி என்று மாற்றிக் குறிப்பிடத் தொடங்கினார். எங்கள் துறையிலேயே பணிபுரியும் முகம்மது அலி என்னும் நண்பர்வழியாகத்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அப்போது பெங்களூரில் வசித்துவந்த சரஸ்வதி ராம்னாத் அவர்களைச் சந்தித்து ஒரு நீண்ட நேர்காணல் எடுக்கவேண்டும் என்னும் விருபத்தை ஒருமுறை வெளிப்படுத்தினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தபோது அவர் மிகவும் மகிழ்ந்தார். இதுநடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருடைய வரிக்குதிரைகள் என்னும் கவிதைத்தொகுப்பு அவருடைய சொந்தப் பெயரிலேயே வெளிவந்தது. பெங்களூரிலிருந்து சதாரா என்ற ஊருக்கு மாற்றலாகிச் சென்ற தருணத்தில்தான் அந்த ஊரின் பெயரைத் தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார். சந்தியா பதிப்பகத்தின் வழியாக அவருடைய சிறுகதைத் தொகுப்பொன்றும் வெளிவந்தது. பல கருத்தரங்குகளில் பங்கேற்று தொடர்ந்து தன் சிந்தனைகளை முன்வைத்து ஊக்கமுடன் செயல்படுபவராகவே வலம்வந்துகொண்டிருந்தார். உரையாடலில் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பாவைப் பாடல்களில் தாம் திளைத்த அனுபவத்தை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் ராயர்காப்பி கிளப் என்னும் வலைமனையில் தொடர்ந்து எழுதிவந்தார். அவருடைய சிந்தனை வளத்துக்கு இந்த அனுபவக்கட்டுரைகள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மொழிபெயர்ப்பு முயற்சியிலும் அவர் ஆர்வம் காட்டினார். எச்.எஸ்.சிவப்பிரகாஷ் என்னும் கன்னட நாடக ஆசிரியர் சிலப்பதிகாரத்தைப் பின்னணியாகக் கொண்டு மதுரைக்காண்டம், மாதவி என்னும் இரண்டு நாடகங்களை எழுதினார். அவற்றில் மதுரைக்காண்டம் என்னும் நாடகத்தை நான் மொழிபெயர்த்திருந்தேன். மாதவி நாடகத்தையும் நான் மொழிபெயர்த்திருப்பேனோ என்கிற ஐயமிருந்தது அவருக்கு. என்னிடம் விசாரித்தார். நான் மொழிபெயர்க்கவில்லை என்றதும் அவர் ஊக்கத்துடன் மொழிபெயர்த்தார். பெண் பாத்திரங்களை மையமாகக் கொண்ட நாடகங்களைத் தொடர்ந்து ஆர்வத்துடன் அரங்கேற்றிவரும் வெளி ரெங்கராஜனுக்கு அந்தக் கையெழுத்துப் பிரதியை அனுப்பிவைத்தார். அவரும் அந்த நாடகத்தை அரங்கேற்றும் எண்ணத்தில் இருந்தார். சில முன்னேற்பாடுகளை செய்துவிட்டு பயிற்சியைத் தொடங்க எண்ணியிருந்தார். ஆனால் தன் மொழிபெயர்ப்பில் நாடக அரங்கேற்றத்தைக் காணாமலேயே அவர் இயற்கையெய்திவிட்டார். சதாராவிலிருந்து மீண்டும் பெங்களூர் வந்துவிடலாம் என்று எண்ணியிருந்த அவரை சாங்லிக்கு மாற்றல் செய்தது நிர்வாகம். அது அவரை மிகவும் மனச்சோர்வுக்குள்ளாக்கியது. கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு அவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பெங்களூர் வந்தார். சில மாதங்கள்மட்டுமே வேலை பார்த்திருந்துவிட்டு விருப்ப ஓய்வைப் பெற்று எழுத்து முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட நினைத்தார். எதிர்பாராதவிதமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால் அந்த முயற்சி கைகூடவில்லை. தொடர்ச்சியான மருத்துவம் பலனளிக்காமல் 27.03.2007 அன்று மாலை இயற்கையெய்தினார். 28.03.2007 அன்று அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு பெங்களூர் இலக்கிய நண்பர்களும் அலுவலக நண்பர்களும் அஞ்சலி செலுத்தினர். அன்று நண்பகல் அவருடைய உடல் எரியூட்டப்பட்டது.

**

நன்றி: திண்ணை,லதா ராமகிருஷ்ணன், பாவண்ணன்

 

நாகிப் மா·பௌஸ்

mahfouz.gif 

நாகிப் மா·பௌஸ் – நோபல் பரிசு (1988) ஏற்புரை
(தமிழில் : ஜி. குப்புசாமி / ‘அட்சரம்’ )அன்பார்ந்த சீமாட்டிகளே, கனவான்களே,முதலில் நான் ஸ்வீடிஸ் அகாதெமிக்கும், அதன் நோபல் குழுவிற்கும் என்னுடைய நீண்ட, இடைவிடாத இலக்கிய முயற்சிகளை அங்கீகரித்து கௌரவப் படுத்தியிருப்பதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, எனது உரையை பொறுமையுடன் சகித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் உங்களில் பெரும்பான்மையினருக்கு பரிச்சயமில்லாத மொழியில் நான் பேசுகிறேன். ஆனால் உண்மையில் இந்த மொழிதான் பரிசை வென்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். எனவே உங்களுடைய கலாச்சார, நாகரீகச் சோலையில் இந்த மொழியின் இசை மிதந்தே தீர வேண்டும். இத்துடன் இது முடிந்துவிடாதென்றே நான் நினைக்கிறேன். கவலை மிகுந்த நம் உலகத்தில், இன்பத்தின் சுகந்தத்தைப் பரப்பிவரும் மாபெரும் சர்வதேச படைப்பாளிகள் அலங்கரிக்கும் இச்சபையில் எனது தேசத்தின் எழுத்தாளர்கள் பலரும் எதிர்காலத்தில் கௌரவிக்கப் படுவார்களென்றே நான் உறுதியுடன் நம்புகிறேன்.என் பெயர் இப்பரிசிற்காக அறிவிக்கப்பட்டவுடன் , அந்த இடம் சட்டென்று நிசப்தமானதாகவும், பலரும் நான் யார் என்பது அறியாமல் வியந்ததாகவும் ஓர் அயல்நாட்டு நிருபர், கெய்ரோவில் என்னிடம் கூறினார். எனவே இயன்றவரையில் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன். சரித்திரத்தின் ஒரு கட்டத்தில் இருவேறு நாகரிகங்களுக்க்கிடையே நிகழ்ந்த ஒரு சந்தோஷமான திருமணத்தின் மூலம் பிறந்தவன் நான். இவற்றில் முதல் நாகரிகத்திற்கு ஏழாயிரம் வயதாகிறாது. அது ·போரோனிக் நாகரிகம். அடுத்ததிற்கு ஆயிரத்து நானூறு வயதாகிறது. அது இஸ்லாமிய நாகரிகம். உயர்ந்த அறிஞர்களான உங்களிடம் இவ்விரண்டயும் நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் இப்போது சிலவற்றை நினைவு படுத்துவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.·போரோனிக் நாகரிகத்தைப் பொறுத்தவரை, அதன் ஆக்கிரமிப்புகளைப் பற்றியும், உருவான பேரரசுகள் பற்றியும் பேசப் போவதில்லை. நல்ல வேளையாக இன்றைய யுகத்தின் மனசாட்சி, இவற்றை காலாவதியான, பெருமிதமான சங்கடத்துடன் ஒதுக்கி விடுகிறது. முதன்முறையாக கடவுள் என்றதொரு சக்தியை உணர்ந்து மனிதனுக்கு ஆன்மிக உணர்வு அரும்பியதைப் பற்றியும் பேசப் போவதில்லை. இது ஒரு நீண்ட சரித்திரம். உங்களில் ஒருவர் கூட தீர்க்கதரிசியான மன்னன் அகெனேடனைப் பற்றி அறியாதிருக்க மாட்டீர்கள். இந்நாகரிகத்தின் கலை இலக்கிய சாதனைகளைப் பற்றியோ, புகழ்பெற்ற அதன் அதிசயங்கள், பிரமிட்டுகள், ஸ்பின்ங்ஸ், கமக்கைப் பற்றியோ கூட பேசப் போவதில்லை. இந்நினைவுச் சின்னங்களைப் பார்த்திராதவர்கள்கூட இவற்றைப் படித்தும், இவற்றின் வடிவத்தை, பிரமாண்டத்தை அறிந்தும் பிரமித்திருப்பார்கள்.

எனவே ·போரோனிக் நாகரிகத்தை ஒரு கதையைப் போல – என் சொந்த வாழ்க்கை என்னை ஒரு கதைசொல்லியாக உருவாக்கியிருப்பதால் – அறிமுகப்படுத்தலாமென்றிருக்கிறேன். இதோ ஒரு பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வு: பண்டைய ஓலைச்சுவடி ஒன்றில் அந்தப்புரத்துப் பெண்கள் சிலருடன் தனது அரண்மனை ஊழியர்கள் சிலருக்கு தவறான தொடர்பிருப்பதை அறிந்த மன்னன் ·போரோ அக்கால வழக்கப்படி அவர்களுக்கு உடனடியாக மரணதண்டனை விதிக்காமல் , தேர்ந்த சில அறிஞர்களை அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறான். அதன்பிறகே தனது
தீர்ப்பை வழங்குவது நியாயமென்றும் அவ்வறிஞர்களிடம் கூறியிருக்கிறான்.

இந்த நடவடிக்கை, என் அபிப்ராயத்தில் மாபெரும் பேரரசு ஒன்றை நிறுவியதைவிடவும், பிரமிட்களை கட்டியதைவிடவும், மகத்தானதாகும். அந்நாகரிகத்தின் மேன்மைக்கு, அக்காலத்தைய செல்வச் செழிப்பைவிட இதுவே சிறந்த அடையாளமாகும். தற்போது அந்த நாகரிகம் மறைந்து போய், பழங்கதையாகிவிட்டது. ஒரு நாள் அம்மாபெரும் பிரமிட்கூட மறைந்து போகலாம்; ஆனால் மனிதகுலத்திற்கு சிந்திக்கும் திறனும், உயிர்ப்போடிருக்கும் மனசாட்சியும் உள்ளவரை சத்தியமும் நியாயமுமே நிலைத்திருக்கும்.

இஸ்லாமிய நாகரிகத்தைப் பொறுத்தவரை மனிதகுலம் மொத்தத்தையும் அதனைப்படைத்த படைப்பாளியின் கீழ் சுதந்திரத்தின், சமத்துவத்தின், மன்னிப்பின் அடிப்படையில் ஒன்றுதிரண்ட ஸ்தாபனமாக நிறுவப்பட்டதைப்பற்றி நான் பேசப் போவதில்லை. தீர்க்கதரிசி முஹமது நபியின் மகத்துவத்தைப் பற்றிக்கூட நான் பேசப்போவதில்லை. அறிஞர்களான உங்களில் பலர், உலக சரித்திரத்தின் மாபெரும் மனிதராக அவரை மதிப்பிடுகிறீர்கள். இது ஸ்தாபிக்கப்பட்டதால் எழுப்பபட்ட ஆயிரக்கணக்கான ஸ்தூபிகளைப் பற்றியோ , இவற்றில் பரப்பப்படும் பக்தியையும், புனிதமான அன்புணர்வும், பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்தியாவையும், சீனாவையும் தழுவிக்கொண்டு, இங்கே ·ப்ரெஞ்சு எல்லைவரை பரவியிருப்பதைப் பற்றியும் நான் பேசப் போவதில்லை. இதற்கு முன்போ, பிறகோ மனிதகுலம் இதுவரை அறிந்திராத இன ஒற்றுமையும், மதசகோதரத்துவத்தையும் அது சாதித்திருப்பதைப் பற்றிக்கூட கூறப்போவதில்லை.

பதிலாக, இந்நாகரிகத்தின் குறிப்பிடத்தகுந்த குணமாயிருக்கிற ஓர் இயல்பை இந்த ஆச்சரியகரமான சரித்திர நிகழ்ச்சியைக் கூறி அறிமுகப்படுத்துகிறேன். பைஸாண்டியத்திற்கெதிரான ஒரு வெற்றிகரமான போருக்குப் பிறகு அவர்கள் பிடித்து வைத்திருந்த போர்க்கைதிகளை விடுவித்துவிட்டு அதற்கு ஈடாக அந்நாட்டின் தொன்மையான கிரேக்க கலாச்சாரத்தின் தத்துவ, மருத்துவ , கணித நூல்களைப் பெற்றுக்கொண்டதாக வரலாற்றுப் பதிவு இருக்கிறது. மனிதனின் அறிவு வேட்கைக்கு வழங்கப்பட்ட மதிப்பீடாகவே இதனைக் கருதலாம். அயல் மதத்தைச் சேர்ந்த கலாச்சாரமாக இருப்பினும் அவர்களின் அறிவுப் பொக்கிஷங்களை தேடி விழைவதென்பது நாகரிகத்தின் உச்சமாகும்.

இவ்விரு நாகரிகங்களின் மடியில் பிறக்க வேண்டியது என் விதியாகி, இவற்றின் அமுதமருந்தி, இவற்றின் கலைகளையும், இலக்கியங்களையும் உண்டு நான் வளர்ந்தேன். அதன்பின் உங்களது செழிப்பான கலாச்சாரத்தின் தேனைப்பருகினேன். இவை எல்லாவற்றிலிருந்தும் கிடைத்த ஊக்கத்தாலும், எனது சுயகவலைகளாலும் நெகிழ்ந்த வார்த்தைகள் என்னிடமிருந்து புறப்படத்துவங்கின. மேன்மை பொருந்திய தங்கள் அகாதெமியால் இவ்வார்த்தைகள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டுப் பெறும் அதிர்ஷ்டம் நிகழ்ந்திருக்கிறது. இதற்கான வந்தனங்கள், என் பெயராலும், இவ்விரு நாகரிகங்களை வளர்த்த மாபெரும் ஆத்மாக்களின் பெயராலும் இருக்கட்டும்.

உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்; மூன்றாம் உலகிலிருந்து வருகிற இம்மனிதனுக்கு கதை எழுதுவதற்கான மன நிம்மதி எப்படி கிடைக்கிறதென்று. நீங்கள் கருதுவது முழுக்க சரியே. கடன் சுமையில் அழுந்திப் போயிருக்கிற, செலவினங்களின் அழுத்ததினால், பசியால் அல்லது ஏறக்குறைய பட்டினியால வாடிக்கொண்டிருக்கிற உலகத்திலிருந்துதான் நான் வருகிறேன். ஆசியாவில் சிலர் வெள்ளத்தால் அழிவதைப் போல, ஆப்பிரிக்காவில் மற்றவர்கள் வறட்சியால் அழிந்து கொண்டிருக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவில் இலட்சக்கணக்கானோர் மனிதர்களாகவே மதிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு இக்காலத்திலும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றனர். மேற்குக்கரையிலும், காஸாவிலும் தமது சொந்த மண்ணிலேயே – தமது தந்தையினரின், மூதாதையினரின் மண்ணிலேயே- தங்களது இருப்பைத் தொலைத்துவிட்டு இலட்சக்கணக்கானோர் நிற்கின்றனர். ஆதிமனிதன் முதலில் கண்டறிந்த ஓர் அடிப்படை உரிமைக்காகத்தான் அவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். தமது சொந்த மண்ணில், கௌரவமாக வாழ மற்றவர்களால அங்கீகரிக்கப்பட வேண்டுமென்கிற அடிப்படை உரிமைக்காக. இப்போராட்டத்திற்காக இத்தீரமிக்க மனிதர்கள் – ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், குழந்தைகளும் பதிலாகப் பெற்றது உடைந்த எலும்புகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும், சிதைக்கப்பட்ட வீடுகளையும் , சிறையிலும் முகாம்களிலும் சித்திரவதைக்கபடுவதையும் ஆகும். இவர்களைச் சுற்றிலும் பதினைந்து கோடி அராபியர்கள் நிகழ்வதைப் பார்த்து வேதனையிலும், கோபத்திலும் வெந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இப்பகுதி முழுவதுமே விரைவில் வெடித்து சிதறக்கூடிய கொந்தளிப்புப் பிரதேசமாயிருக்கிறது. நியாய உணர்வும், அமைதிக்கான விழைவும் கொண்ட அறிவாளர்களால் மட்டுமே நிச்சயமானதொரு பிரளயத்திலிருந்து இப்பகுதியைக் காப்பாற்ற இயலும்.

ஆம், மூன்றாம் உலகத்திலிருந்து வருகிற ஒரு மனிதனுக்கு கதைகள் எழுத மன அமைதி எப்படிக் கிடைக்கும்? அதிர்ஷ்டவசமாக கலை தாராளமாகவும், கருணையோடும் இருக்கிறது. பிரச்சினைகளற்ற சந்தோஷங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை; துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை. அவரவர் நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகளை அவர்களுக்கே உரித்தானதொரு தனிமுறையில் வெளிப்படுத்திக்கொள்ள கலை அனுமதிக்கிறது.

நாகரிக வரலாற்றின் இந்த அதிமுக்கிய தருணத்தில் மனிதகுலத்தின் துயரக்குரலால் பதியப்படாமல் சூன்யமாக மரித்துப் போவதென்பதை நினைத்துப் பார்க்கவே இயலாது; ஏற்றுக் கொள்ளவும் முடியாது. வல்லரசுக்கிடையிலிருந்த பனிப்போர் முடிந்து விட்ட இப்பொழுதில்தான் உண்மையில் மனிதகுலம் முதிர்ச்சியடைந்திருக்கிறதென்று நம்மால் ஆசுவாசப்படுத்திக் க்கொள்ள முடிகிறது. இத்தருணத்தில் மனிதமனம் தன்னிடம் பொதிந்திருக்கும் பேரழிவுக் கூறுகளையும், யுத்தவெறியையும் முற்றாக களைந்தெடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. விஞ்ஞானிகள் , தொழிற்சாலைக் கழிவுகள், சுற்றுச் சூழலில் உண்டாக்கும் மாசுகளை அகற்ற முனைவதைப் போல மனிதமனத்தின் அறநெறிகளில் பீடித்திருக்கும் மாசுகளையும் அகற்ற வேண்டிய கடமை அறிவு ஜீவிகளுக்கு இருக்கிறது. இந்த யுகத்தின் நல்ல எதிர்காலத்திற்குத் தேவையான தீர்க்க தரிசனமும், தீட்சண்யமான அணுகுமுறையும் நமது நாட்டின் பெருந்தலைவர்களிடமும், பொருளாதார வல்லுநர்களிடமும் தேவையென உரிமையுடன் கேட்கவேண்டியது நமது கடமையாகும்.

பண்டைக்காலங்களில் ஒவ்வொரு தலைவரும் தமது தேசத்திற்காக மட்டுமே கவலப்பட்டு வந்தனர். தமக்கு எதிரான கருத்துடையவர்கள் விரோதிகளாகவும், தமது நாட்டைச் சுரண்ட வந்தவர்களாகவும் கருதிவந்தனர். தமது தற்பெருமைக்கும், தனிப்பட்ட வெற்றிகளுக்கும் தந்த முக்கியத்துவத்தை வேறெந்த மதிப்பீடுகளுக்கும் தரவில்லை. இதற்காக பல தர்ம நியதிகளும், மதிப்பீடுகளும் பலியிடப்பட்டன; அறமற்ற பாதைகள் நியாயப்படுத்தப் பட்டன; கணக்கற்ற ஆத்மாக்கள் அழித்தொழிக்கப்பட்டனர். பொய், ஏமாற்று, களவு, துரோகம் போன்றவை மகத்துவத்தின் அடையாளங்களாய் கோலோச்சி வந்தன. இன்று இத்தகைய பார்வைகளை அவற்றின் அடிப்படைகளிலிருந்தே திசைதிருப்ப வேண்டிய தேவை வந்துவிட்டது. இன்றைய தேசத்தலைவர் என்பவர், அவரது உலகாளவிய பார்வையாலும், மனிதகுலத்தின் மேல் அவர் கொண்டிருக்கும் பொறுப்புணர்வாலும் மட்டுமே மதிப்பிடப் படுகிறார். முன்னேறிய நாடுகளும், மூன்றாம் உலகநாடுகளும் ஒரே குடும்பம்தான். அறிவும், ஞானமும், நாகரிகமும் பெற்றுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இதற்கான பொறுப்பு இருக்கிறது. அநீதியை வேடிக்க பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். உமது தகுதிக்கேற்றதொரு பங்கினை நீங்கள் ஆற்றியேயாக வேண்டும். உலக சமுதாயத்தின் மேட்டுக் குடியினரான உங்களுக்கு இவ்வுலகத்தின் எத்திசையிலும் இருக்கிற மனிதரோ, தாவரமோ, மிருகமோ புரிகிற தவறுகளில் ஒரு பங்கிருக்கிறது.

சொற்கள் நம்மிடம் போதுமான அளவு இருக்கின்றன. செயல்படுவதற்கான நேரமிது. கொள்ளையர்களின், லேவாதேவிக்காரர்களின் யுகம் இத்துடம் முடியட்டும். இப்பூமி முழுவதற்குமான தலைவர்கள் உருவாகட்டும். தென் ஆப்பிரிக்காவின் அடிமைகளைக் காப்பாற்றுங்கள்! ஆப்பிரிக்காவின் பட்டினியாளர்களைக் காப்பாற்றுங்கள்! பாலஸ்தீனியர்களை துப்பாக்கி குண்டுகளிலிருந்தும், சித்திரவதையிலிருந்தும் காப்பாற்றுங்கள்! தமது மகத்தான ஆன்மிகப் பாரம்பரியத்தை இஸ்ரேலியர்கள் கெடுக்காதிருக்கும்படி காப்பாற்றுங்கள்! பொருளாதார கடும் சட்டங்களால கடனில் மூழ்கித் தவிப்போரைக் காப்பாற்றுங்கள்! அறிவியல் விதிகளை விட மனிதநெறிகளுக்கு கட்டுப்பட்டிருப்பதே மேன்மையானதென்று நிறுவுங்கள்!

உங்களது மன அமைதியை நான் குலைத்து விட்டிருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள் அன்பர்களே ! ஆனால் மூன்றாம் உலக நாடு ஒன்றிலிருந்து வரும் ஒருவனிடமிருந்து வேறு எதனை நீங்கள் எதிர்பார்க்க முடியும்? நிரப்பிவைத்திருக்கும் திரவத்தின் நிறத்தையல்லவா கண்ணாடிக் கோப்பை பெற்றிருக்கும்? மேலும் மனிதகுலத்தின் அவலங்களை இம்மாமண்டபத்தில் – அறிவியலையும், இலக்கியத்தையும், மேன்மையான மனிதமதிப்பீடுகளையும் அரியணையில் அமர்த்தி அங்கீகரிக்கும் இம் மகத்தான சபையில் – உங்கள் உயர்ந்த நாகரிகச் சோலையில் எதிரொலிக்காமல் வேறெங்கே இக்கோரிக்கையை வெளியிட முடியும்?

தனது திரண்ட செல்வத்தையெல்லாம் இந்த உன்னதப் பணிக்காக அர்ப்பணித்து அம்மாமனிதரின் உதாரணத்தை முன்வைத்து, நமது பண்பாட்டின் அடையாளமாக, உயர்குடியாளர்களான நீங்களும் அவர் வழியே நடந்தேயாக வேண்டுமெனெ மூன்றாம் உலகத்தினரான நாங்கள் விழைகிறோம். நம்மைச் சுற்றி நடப்பவை எப்படியிருப்பினும் இறுதிவரை நான் நம்பிக்கை இழக்கப்போவதில்லை. இறைவன் அதர்மத்திற்கெதிரே ஜெயிக்கப்போகிறானா என சந்தேகப்படப் போவதில்லை.

இறைவன் ஒவ்வொருநாளும் வென்றுகொண்டுதான் இருக்கிறான். நாம் நினைப்பதை விட சாத்தான் சோனியாகவே இருக்கக்கூடும். வெற்றி என்பது கடவுள் பக்கம் எப்போதும் இருக்குமென்பதற்கு அழிக்க முடியாத சான்றாக, இத்தனைப் பேரழிவுகளையும், இயற்கைச் சீற்றங்களையும், கொடும் விலங்குகளையும், நோய்களையும், அச்சங்கள், தலைக்கனங்களின் விளைவுகளையும் மீறி இம்மனிதகுலம் தழைத்து வருவதைக் கண்டு வருகிறோம். இத்தனைக்கும் மத்தியில்தான் மனிதன் தேசங்களை உண்டாக்கியும், புதிது புதிதாய் கோடானுகோடி விஷயங்களைப் படைத்தும், கண்டறிந்தும், விண்வெளியை வென்றும், மனித உரிமைகள் பிரகடனம் செய்தும் வந்திருக்கிறான். உண்மை என்னவென்றால் சாத்தான் போடும் இரைச்சலிலும், ஆடும் பேயாட்டத்திலும் மனிதன் சந்தோசங்களை விட வலிகளையே அதிகம் நினைவுபடுத்திக் கொள்கிறான். நமது பெரும்புலவர் அபுல்ஆலா-அல்-மாரி சொன்னதைப் போல :

‘ஜனனத்தின் போதான களிப்பை விட
நூறுமடங்கு பெரிது மரிக்கும் போதான துக்கம்’

இறுதியாக என் நன்றிகளை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொண்டு, மன்னிக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.

**

நன்றி : ஜி. குப்புசாமி / ‘அட்சரம்’
மின்னஞ்சல் : tamilatchara@yahoo.com

**

தொடர்புடைய சுட்டி :

நாகிப் மா·பௌஸ் – நேர்முகம் (தீராநதி)

« பழைய வரவுகள்